புதன், 28 நவம்பர், 2012

அட ஆமாயில்ல!

அட ஆமாயில்ல!

சில அறிஞர்களின் கருத்துக்களைப் படிக்கிற போது ”அட ஆமாயில்ல?” என்று நமக்குத் தோன்றுவதுண்டு அல்லவா?

எத்தனையோ அறிஞர்களின் ஓருசில வரிகள் என்னை நிறைய சிந்திக்க வைத்ததுண்டு. எழுத வைத்ததுண்டு. இழந்த உற்சாகத்தை மீட்டுத் தந்ததுண்டு. சோதனைகளைத் தாங்கும் பக்குவத்தைத் தந்ததுண்டு. சிரிக்க வைத்ததுண்டு. என் செயல்முறைகளை மாற்றியதுண்டு. அதை எழுதி வைத்துக் கொள்ளும் பழக்கம் ஆரம்பத்திலிருந்தே எனக்கு உண
்டு. அப்படி எழுதி வைத்துக்கொண்ட அறிவுபூர்வமான, சுவாரசியமான, வழிநடத்தக்கூடிய சில வரிகளை இங்கு பதிவு செய்ய எண்ணியதன் விளைவு தான் இந்த “அட ஆமாயில்ல?”.

இதில் எல்லாமே எல்லாருக்கும் பிடிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லா விட்டாலும் ஓரிரண்டு உங்களை சிந்திக்க வைக்கலாம், உலுக்கி எடுக்கலாம், பாதைகளை மாற்றலாம், வெறுமனே புன்னகைக்கவாவது வைக்கலாம். படியுங்கள்.

பணத்திற்கு நாம் தான் அதிக மதிப்புக் கொடுக்கிறோமே தவிர இறைவன் அதற்கு மதிப்புக் கொடுத்ததாய் தெரியவில்லை. இல்லா விட்டால் அதைத் தகுதி இல்லாதவர்களிடமும், அயோக்கியர்களிடமும் கொடுத்து வைப்பாரா?
-யாரோ

உனக்கு உரிமை இல்லாத பொருளை எடுத்துக் கொண்டு போனால் அழிவு தான். இராவணன் சீதையைக் கொண்டு போன மாதிரி.
-ராஜாஜி

ஒரு மனிதனை நன்கு தெரிந்து கொள்ள வேண்டுமா? அவன் பதில்களைப் பாராதே. கேள்விகளைப் பார்.
-வால்டேர்

மற்றவர்களின் தீய குணங்களை நாம் கற்களில் செதுக்குகிறோம். ஆனால் அவர்களது நற்குணங்களை ஓடுகிற தண்ணீரில் எழுதுகிறோம்.
-விகடர் ஹ்யூகோ

உன் அழகிலே மனமகிழ்கிறாயா? ரோஜாவும் கூடத்தான் மிக அழகாய் இருக்கிறது. ஆனால் அது சீக்கிரம் வாடிப் போய் விடுகிறது. மலருக்கும் அழகுக்கும் அற்ப வாழ்வு தான் அளிக்கப்படுகிறது. ஆகவே அதை எண்ணி மகிழாதே.
-கிரேக்கக் கவிதை

அனுபவம் என்பது நமது பொருள்களையெல்லாம் இழந்தபின் எஞ்சியிருப்பது.
-காரனெட்

எல்லாம் போய் விட்டதென்று கவலைப்பட வேண்டாம். எல்லாம் போய் விடவில்லை. எவராலும் வெல்ல முடியாத உள்ளம் இருக்கிறது. அதைக் கொண்டே எதையும் சாதித்து விடலாம்.
-மில்டன்

காதலம்புகள் மலரால் ஆனவை. ஆனால் அது இதயத்தைத் துளைக்கும் போது மலராக இருப்பதில்லை.
-மெக்ஸ்கோமதாஸ்

சின்ன விஷயங்களைப் பற்றி ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். ஏனெனில் கப்பலின் அடித்தளத்தில் விழும் ஓட்டை கப்பலையே கவிழ்த்து விடுமல்லவா?
-ஃபிராங்க்ளின்

பசியுள்ள ஒரு நாயைக் காப்பாற்றினாயானால் அது உன்னைக் கடிக்காது. மனிதனுக்கும், நாயிற்கும் இடையே உள்ள வித்தியாசம் இது தான்.
-மார்க் ட்வெயின்


ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையும் ஒரு குறிப்புப் புத்தகம். ஒரு கதை வரைய நினைத்து மற்றொன்றை வரைகிறான். எழுத நினைத்ததோடு எழுதியதை ஒப்பிடுங்கால் அதுவே வாழ்க்கையின் மிக இழந்த காலமாகும்.
-ஹென்றி ஃபீல்டு

ஒருவன் தான் தவறு செய்வதை ஒப்புக் கொள்ள வெட்கப்படவே கூடாது. ஒப்புக் கொள்வதன் பொருள் என்ன? அவன் நேற்றை விட இன்று அதிக அறிவு பெற்றிருக்கிறான் என்பதே.- போப்

நாம் வாழும் போது உலகம் முழுவதையும் வளைத்துக் கட்டிக் கொள்ள விரும்புகிறோம். ஆனால் இறந்த பிறகு தான் எவ்வளவு சிறிய இடம் நமக்குப் போதுமானது என்று தெரிகிறது.
- மாசிடோனிய மன்னர் பிலிப்

கல்விச் செருக்கு படித்த குப்பைகளை நம் தலைகளில் திணித்து
இருக்கின்ற மூளையை வெளியே தள்ளி விடுகின்றது.
- கோல்டன்

கேலியின் பெருமை கேட்பவர் செவியைப் பொறுத்தது. அது ஒரு போதும் சொல்பவர் நாவில் இல்லை.
- ஷேக்ஸ்பியர்

சணலை நெருப்பில் இருந்து ஒதுக்கி வைக்கவும். இளைஞனை சூதாட்டத்தில் இருந்து ஒதுக்கி வைக்கவும்.
- ஃபிராங்க்ளின்

ஒருவன் எந்த மனிதனுக்கு அஞ்சுகிறானோ அவனை நேசிப்பதில்லை.
- அரிஸ்டாடில்

சம்பாஷணை உலக அறிவை விருத்தி செய்யும். ஏகாந்தம் பேரறிவின் பள்ளி.
- கிப்பன்

உரையாடலில் மௌனமாய் இருப்பதும் ஒரு கலையாகும்.
- ஜாஸ்லிட்

அறிவுடைமை வலிமையை விடப் பெரியது. இயந்திர நுணுக்கங்களை அறிந்தவன் வெறும் வலிமையைக் கண்டு சிரிக்கிறான்.
- ஜான்சன்

நல்லவர்களது துரதிர்ஷ்டம் அவர்களை வானை நோக்கி முகங்களைத் திரும்பும்படி செய்கின்றது; கெட்டவர்களது துரதிர்ஷ்டம் அவர்கள் தரையை நோக்கி தலைகளைத் தொங்கவிட்டுக் கொள்ளும்படி செய்கின்றது.
- ஸா அதி

கண்கள் ஒன்று சொல்ல நாவொன்று சொன்னால், விஷயம் அறிந்தவன் கண்கள் சொல்வதையே நம்புவான்.
- எமர்சன்

பொய்யைத் துரத்திக் கொண்டு ஓடாதே. நீ அதை விட்டு விட்டால் அது விரைவில் தானாகவே செத்து விடும்.
- இ.நாட்

வழக்கங்கள், நம்பிக்கைகள், உறுதிகளை அமைக்க வேண்டிய பருவம் இளமைப் பருவம்.
- ரஸ்கின்

கூட்டம் தன் அபிமானத்தைக் கொண்டே சிந்திக்கும். அறிவைக் கொண்டு சிந்திக்காது.
-ட்புள்யூ.ஆர்.ஆல்ஜெர்

நேர்த்தியாகச் செய்து முடிப்பதோடு உன் வேலை தீர்ந்தது. அதைப் பற்றி பேசுவதை மற்றவர்களுக்கு விட்டு விடு.
- பிதாகோரஸ்

ஒரேயடியாக உச்சிக்குப் போய் விட வேண்டும் என்ற முயற்சி தான் உலகில் பெருந்துயருக்குக் காரணமாய் இருக்கின்றது.
- காபெட்
கடமையும் இந்த நாளுமே நம்முடையவை. பயன்களும், எதிர்காலமும் கடவுளைச் சேர்ந்தவை.
- ஹாஸ்லிட்

ஆசிரியராக விரும்புபவன் முதலில் மாணவனாக இருக்க வேண்டும்.

- டிரைடன்

ஒருவர் புன்னகை புரியும் விதத்தில் இருந்தே அவர் குணத்தைப் பற்றி ஏதாவது தெரிந்து கொள்ளலாம். சிலர் புன்னகைப்பதே இல்லை. ஆனால் இளிக்க மட்டும் செய்வார்கள்.

- போவீ

பொறாமையுள்ளவன் தன் தாழ்ச்சியை எப்போதும் உணர்ந்து இருப்பான்.

- பிளினி

மருந்துக்களில் முதன்மையானவை ஓய்வும் உபவாசமும்.

- ஃபிராங்க்ளின்

ஒன்றுக்கும் பிரயோசனமில்லை என்று தள்ளி விடும் படியானவராக உள்ள எவரையும் இது வரையில் நான் பார்த்ததில்லை. சரியான சமயம் வாய்த்தால் ஏதாவதொரு வகையில் எவரும் பயன்படக் கூடும்.

- ஹென்றி ஃபோர்டு

வெறும் பேச்சும், பெரும் பேச்சும் பேசி செயல்படாமல் சோம்பிக் கிடப்பவர்கள் வழிகாட்டும் தலைவர்கள் என்ற மதிப்பினைப் பெறுகின்றனர் என்றால் அவர்கள் சுட்டிக் காட்டுகின்ற வழியில் நடப்பவர்கள் எத்தகைய லட்சியவாதிகளாகத் திகழ்வர் என்பதைக் கூறவும் வேண்டுமா?

- மான்செஸ்டர் கார்டியன்

சோம்பேறித்தனம், கர்வத்தால் மனம் கெடுதல், தடுமாற்றம், கூட்டமாக வீண் அரட்டையடித்தல், முரட்டுப் பிடிவாதம், போலித் தற்பெருமை, சுயநலம் ஆகிய ஏழு கெட்ட தன்மைகளும் நம்மை சுற்றி வளைத்துக் கொண்டு கெடுதல் செய்கின்ற பாவங்களாகும்.

- விதுர நீதி

ஒரு ஏழையான முட்டாளுக்கு நிறைய பணம் கிடைத்தால் அவன் பணக்கார முட்டாளாகத் தான் மாற முடியும்.

- ஆபிரகாம் மில்லர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக