வியாழன், 3 அக்டோபர், 2013

உன்மேல் உனக்கு நம்பிக்கை இருந்தால்

உன்மேல் உனக்கு நம்பிக்கை இருந்தால் கடவுளே தேவையில்லை - பெரியார்.

உன்மேல் உனக்கு நம்பிக்கை இல்லாவிட்டால் கடவுளே வந்தாலும் உன்னை காப்பாற்ற முடியாது - விவேகானந்தர்.

உன்னை பிறரோடு ஒப்பிட்டு கொள்ளும் போதெல்லாம் உன் சக்தி விரயமாகிறது. உன்னை உன்னோடு ஒப்பிட்டுக் கொள்ளும் போதெல்லாம் உன் வளர்ச்சி நிகழ்கிறது.

வெற்றி மந்திரம் - விதியை நம்பியவர் வென்றதில்லை

நமது அன்றாட வாழ்க்கையின் பல்வேறு நிலைகளில் பல திறமைசாலிகளைப் பார்த்து ஆச்சர்யப்படுவோம். ‘இவர்கள் பிற்காலத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்று பிரபலமாவார்கள்’ என்று கணித்திருப்போம்.

ஆனால் நாளடைவில் அவர்களில் மிகச் சிலரே வெற்றியடைகிறார்கள். பெரும்பாலானவர்கள் நாம் எதிர்பார்த்த அளவு சாதனைகள் புரிவதில்லை என்பதைவிட இருந்த சுவடே தெரியாதபடி காணாமல் போய்விடுவதுண்டு.

வெற்றியடைந்தவர்களைக் கண்டு ஆச்சர்யவப்படுவதைவிட அதிகத் திறமை கொண்டவர்களாக நாம் கணித்தவர்கள் சாதிக்காமல் போனது ஏன்? என்ற ஒரு மிகப்பெரிய கேள்வி நம்முன் எழுவதுண்டு.

பள்ளியில் கால்பந்து விளையாட்டில் சூரப்புலியாக இருந்த நீங்கள், தற்போது சம்பந்தமே இல்லாமல் கணக்கு எழுதிக் கொண்டிருக்கிறீர்களே? என்று கேட்டால், பெரும்பாலானவர்கள் சொல்லும் பதில் என்னவாக இருக்கும் தெரியுமா?

‘விதி’

‘விதி’ என்ற ஒற்றைச் சொல்லில் அவர்களது தோல்விகளை மறைத்துக் கொள்வார்கள். விதி என்பது தங்களுக்குத் தாங்களே எழுதிக் கொள்ளும் முடிவுரை என்ற உண்மை அவர்களுக்குப் புரிவதில்லை.

ஆம், விதி என்பது எழுதப்படுவது அல்ல, ஏற்படுத்திக் கொள்வது என்பதே நிதர்சன உண்மை.

தோல்வியடைந்த மனிதர்களை ஆழமாக ஆராய்ந்து பார்த்தால் அவர்களிடம் மூன்று குணாதிசயங்கள் இருப்பதைக் கண்டிப்பாக காண முடியும்.

அதில் முதலாவது, சாதனை புரிந்தே தீர வேண்டும் என்ற அக்னி, அதாவது வெறி இருப்பதில்லை. இந்த வெறி இல்லாதவர்களிடம் எத்தனை திறமை இருந்தாலும் அவர்கள் பிரகாசிப்பதில்லை.

இரண்டாவது அவர்களது செயல்பாடுகள் சீராகவும், தொடர்ச்சியாகவும் ஒரே விசயத்தில் இருப்பதில்லை. இன்று ஒன்றில் ஆர்வமாக இருப்பவர்கள், நாளை வேறொன்றில் தீவிர ஈடுபாடு காட்டுவார்கள். சில நாட்களில் மீண்டும் புதிதாக வேறொன்றின் மீது ஆர்வம் என்று வெற்றி நோக்கத்தை மாற்றிக் கொண்டே இருப்பார்கள்.

மூன்றாவது அவர்கள் வெற்றி வரும்வரை பொறுமையாக தாக்குப்பிடித்து நிற்பதில்லை. தற்காலிகத் தோல்விகளுக்கு பயந்து பின்வாங்கி விடுவார்கள்.

தற்காலிக தடங்கல்களும், நிராகரிப்புகளும், தோல்விகளும் முயற்சிகளைக் கைவிட அவர்களுக்கு போதுமானவையாக இருக்கும்.

இந்த மூன்று தவறுகளையும் வெற்றியாளர்கள் செய்வதில்லை என்பதை பல வெற்றியாளர்களின் வாழ்க்கை அனுபவங்களில் இருந்து நம்மால் புரிந்து கொள்ள முடியும்.

ஒரு துறையில் வெற்றியடைய வேண்டும் என்று விரும்பினால் அதில் எந்த அளவுக்கு உறுதியாக நிற்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக திகழ்பவர் பிலைய்ஸ் பாஸ்கல் என்ற கணித மேதை.

1623ம் வருடம் பிரான்ஸில் பிறந்த பாஸ்கல், மூன்று வயதிலேயே தாயை இழந்தார். அதனால் பாஸ்கலுக்கு உடல்நலம் பெருமளவு பாதிக்கப்பட்டது. பாஸ்கல் நீண்ட நாட்கள் உயிர் வாழமாட்டார் என்று மருத்துவர்களும், ஜோதிடர்களும் கூறினர். அதனால் அவரை செல்லம் கொடுத்து வளர்த்தார் நீதிபதியாக இருந்த அவரது தந்தை.

வளரத் தொடங்கிய பாஸ்கல் அறிவுக் கூர்மையுடன் திகழ்ந்தார். தந்தை பாஸ்கல் சட்ட மேதையாக வளர வேண்டும் என்று விரும்பினார்.

ஆனால் பிறப்பிலேயே கணித ஞானம் கொண்டிருந்த பாஸ்கல் முழுநேரம் கணிதக் கோட்பாடுகளிலேயே ஆர்வமாக இருந்தார்.

எத்தனை அறிவுரை கூறியும் பாஸ்கல் மனம் மாறாததைக் கண்ட அவரது தந்தை சட்டப்புத்தகம் மட்டுமே நிறைந்த அறையில் அவரைப் பூட்டி வைத்தார். உள்ளே சென்ன பின்னரும் சட்டப்புத்தகத்தைப் படிக்காமல் கணிதக் கோட்பாடுகளையே பாஸ்கல் எழுதினார்.

வெறுப்புற்ற தந்தை அங்கிருந்த எழுத்துக் கருவிகள், பேப்பர் என அனைத்தையும் அப்புறப்படுத்தினார்.

ஆனாலும் பாஸ்கல் கொஞ்சமும் மனம் தளராமல் கரித்துண்டு, சாக்பீஸ் போன்றவற்றைக் கொண்டு தரையில் கணிதக்கோட்பாடுகளை எழுதிப் பார்த்தார். இறுதியில் தந்தை தன் கொள்கையை விட்டுக்கொடுக்க வேண்டியதானது.

16 வயதிலேயே கணித வடிவ இயலில் பெரிய சாதனையாக கருதப்படும் கூம்பு வெட்டுகளைப் பற்றி நீண்ட கட்டுரை எழுதினார். அதைப்புரிந்து கொள்ள முடியாத ஆசிரியர்கள் கேலியும், கிண்டலும் செய்தனர்.

ஆனால் எதைப்பற்றியும் கவலைப்படாமல் ஆராய்ச்சிகள் மேற்கொண்டார். அன்று அவர் கண்டுபிடித்த கோட்பாடுகள் தான் “பாஸ்கல் தேற்றம்” என்ற பெயரில் இன்று நடைமுறையில் இருக்கிறது.

கால்குலேட்டர் கண்டுபிடிப்பில் முக்கிய பங்களிப்பைச் செய்திருந்த பாஸ்கல் 39வது வயதில் மரணத்தைத் தழுவினார்.

சிறுவயதிலேயே விதியினால் கைவிடப்பட்ட பாஸ்கல், விதியை மீறி உழைத்த காரணத்தினால் தான் இன்று வரை உலகில் கணிதமேதையாக வாழ்ந்து வருகிறார்.

பாஸ்கல் தனது குறிக்கோளையும், எதிர்காலத்தையும் யாருக்காவும், எதற்காகவும் விட்டுத்தரவில்லை. இந்த உலகம் விதி, தோல்வி, கிண்டல் போன்ற சான்றிதழ்களைத் தந்தாலும் அதையும் அவர் பொருட்படுத்தவில்லை. எப்படியும் வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தன்னுடைய விதியை தானே தீர்மானித்துக் கொண்டார்.

எனவே திறமை மட்டுமே வெற்றி பெற போதுமானதல்ல என்பதை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

எத்தகைய திறமையாளர்களுக்கும் உடனடி லாட்டரி போல் வெற்றி வந்து மடியில் விழுந்துவிடாது.

வெற்றிப் பயணத்தின்போது தடங்கல்கள், தோல்விகள் சகஜம் என்பதை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டு ஈடுபாடு குறையாமல் தொடர்ந்து பயணப்படுங்கள்.

நீங்களாக ஏற்றுக்கொள்ளாத வரை தோல்வி நிச்சயமானதல்ல. அது வெற்றிக்கு முந்தைய இடைநிலையே. பொய்யான விதியை ஏற்றுக்கொண்டு முயற்சியைக் கைவிடாதீர்கள்.

விதியின் நாயகனான இறைவன், திறமையை மனிதர்களுக்குத் தந்திருப்பது வெற்றி பெறுவதற்காகவே என்பதை மறந்துவிடாதீர்கள்.
 நாம் கடவுளாக மாறினால் அனாதைகள் நமது பிள்ளைகளாக  ஆவார்கள் அல்லவா ...?!?!?
முதலில் நாம் மனித நேயத்துடன் நமது பெற்றோர்களுக்கு பிள்ளைகளாக நடப்போம்...!!